
புதுடெல்லி: டெல்லியில் உள்ள தவுலா குவான் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிஎம்டபுள்யூ கார் மோதிய விபத்தில் உயிரிழந்த மத்திய அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மனைவி, ‘உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கேட்கவில்லை’ என காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளர் நவ்ஜோத் சிங், ஞாயிற்றுக்கிழமை மதியம் டெல்லி பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவி சந்தீப் கவுருடன் வந்து கொண்டிருந்தபோது, ரிங் ரோட்டில் உள்ள தவுலா குவான் அருகே வேகமாக வந்த நீல நிற பிஎம்டபுள்யூ கார் அவர்களின் பைக் மீது பின்னால் இருந்து மோதியது. இதனால் இருவரும் நிலைகுலைந்து சாலையில் விழுந்தனர். நவ்ஜோத் சிங்குக்கு தலை, முகம் மற்றும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சந்தீப் கவுருக்கு பல இடங்களில் எலும்பு முறிவுகள், தலையில் காயம் ஏற்பட்டன.