
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது.
இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கான யுத்தி இது’ என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்புகின்றன.
ஆனால் மோடி 3.0 அரசோ, எதிர்க்கட்சிகள் தங்களின் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டுகிறது.
இந்த நிலையில், வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பாக தாக்கல் செய்யப்ட்ட 70-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அதில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றது.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு இவ்வழக்குகளை விசாரித்த போது, ‘கடந்த ஏப்ரல் மாதம் வழக்கில் இடைக்கால உத்தரவில் வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோரை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது; வக்பு சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் ஆட்சியர்கள் வரையறை செய்யக் கூடாது’ என கூறியதோடு மத்திய அரசு வக்ஃப் சட்டதிருத்தத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்திருந்தது.
முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க..!
பின்னர் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவிக்காலம் நிறைவடைய இருந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் பதவியேற்ற பிறகு அவரது அமர்வில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் ”ஒரு விஷயத்தை அனுமானம் செய்வது எப்போதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தலையிடுவதற்கு ஆதரவாகவும் இருக்கும் என நீதிமன்றம் கருதுகிறது.

எனவே இந்த வழக்கில் முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழுமையான முகாத்திரங்களை காண முடியவில்லை.
ஒரு நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்பு வழங்க முடியும் என்ற திருத்தத்திற்கு தடை விதிக்கிறோம்.
எந்த ஒரு வழிமுறையும் இல்லாமல் இது தன்னிச்சையான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும். தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகள் மீது முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது! இது அதிகாரப் பிரிவினையை மீறும்.
வக்ஃபு நிலம் தொடர்பாக தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.
வக்பு நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதிகிறோம்.
வக்ஃபு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.

ஒருவர் வக்ஃபு வழங்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற விதி, ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவரா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது தொடர்பான விதிகளை மாநில அரசுகள் உருவாக்கும் வரை, அந்த விதிக்கு தடை விதிக்கிறோம்.
வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனுமதிக்கும் திருத்தத்தை நிறுத்தி வைக்க முடியாது” எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.