
மதுரை மாநகரில் 1 மணி நேர மழைக்குக்கூட தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிப்பதும், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு தீர்வு காண மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கனமழை பெய்தாலே தண்ணீர் வெளியேற முடியாமல் மதுரை மாநகர் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதும், போக்குவரத்து ஸத்ம்பிப்பதும், வாடிக்கையாகி விட்டது. மழைநீர் வெளியேறுவதற்கு 13 பிரதான மழைநீர் கால்வாய்களும், ஏராளமான மழைநீர் வடிகால் வாய்க்கால்களும் உள்ளன. இந்த கால்வாய்களையும், குடியிருப்பு வாய்க்கால்களையும் ஒரளவு மாநகராட்சி தூர்வாரி இந்த பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வந்தது. ஆனாலும், கடந்த 2 நாட்களுக்கு முன் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் மதுரை சாலைகள் வழக்கம்போல் வெள்ளக்காடாக மாறியது.