
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆய்வுசெய்து, உரிய கால கட்டத்துக்குள் தீர்வு காணப்படுவதை கண்காணிக்கவும் துறை செயலர்களுக்கு அறிவறுத்தினார்.