
சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் தேடி, தேடி கைது செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளதைக் கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து 13 நாட்கள் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து செப்.4-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் திடீரென ஒன்று கூடிய 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.