
புதுடெல்லி: அரசு மருத்துவமனைகளில் 24.4 சதவீதம் பேர் உயிரிழப்பதாக சாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (எஸ்ஆர்எஸ்) புள்ளிவிவர அறிக்கை 2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் இறப்பதற்கு முன் நோயாளிகள் பெற்ற மருத்துவ உதவி குறித்த தரவுகளின்படி, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 24.4 சதவீதம் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தனியார் மருத்துவமனைகளில் 15.5 சதவீதமாக உள்ளது. தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கவனித்தபோதிலும் 14.4 சதவீத நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.