• September 12, 2025
  • NewsEditor
  • 0

வங்கியில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் எனக் கடன் வாங்கும் விவசாயிகள், இயற்கைப் பேரிடர் காரணமாக விளைச்சல் இல்லாமல், கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால்கூட, கொத்தாக ஜப்தி செய்வது; குடும்பத்தையே வீதிக்குக் கொண்டுவருவது; உச்சக்கட்டமாகத் தற்கொலையை நோக்கித் துரத்துவது என்பதெல்லாம் வாடிக்கையாகவே இருக்கிறது.

இதுவே, பல்லாயிரம் கோடிகளுக்குக் கடன்கள்; மோசடிகள் என்றெல்லாம் செய்துவிட்டு சொகுசாக வாழ்பவர்களைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை, இந்த வங்கிகளும் அரசுகளும். இப்படி, நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்ப்பவர்கள் மீது, ஊர் வாயை மூடுவதற்காக, பெயருக்கு வழக்கு போட்டுவிட்டு, ஒருகட்டத்தில், அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

இதோ… இந்திய வங்கித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீரவ் மோடியின் வங்கிக் கடன் மோசடி வழக்கிலிருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் செயல் இயக்குநர் கே.வி.பிராமாஜி ராவ் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ரூ.23,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடி, லண்டனுக்குத் தப்பியோடினார். 2018-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ‘தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி’ என அறிவிக்கப்பட்டார். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்துக்குப் பிறகே, இங்கிலாந்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவுக்கு அழைத்து வர, நம் அரசு முயற்சி செய்துகொண்டே இருக்கிறது, ஏழு ஆண்டுகளாக.

நீரவ் மோடி, அவருடைய குடும்பத்தினர், நெருங்கிய உறவினர் மெகுல் சோக்ஸி மற்றும் வங்கி அதிகாரிகள் என 25 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 7 ஆண்டுகளாக வழக்கு நடந்துவரும் நிலையில்தான், கே.வி.பிராமாஜி ராவ் விடுவிக்கப்பட்டுள்ளார். ‘குற்றம்செய்தவர்களைக் கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில், கிடைப்பவர்களைக் குற்றம்சாட்டுவது சரியல்ல. சி.பி.ஐ-யின் நடவடிக்கை முகம் சுளிக்க வைக்கிறது’ என்று கண்டித்துள்ளது, நீதிமன்றம். எனில், உண்மையில் குற்றம் செய்தவர்கள் யார் யார்? இத்தனை ஆண்டுகளாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ, ஆர்.பி.ஐ ஆகிய அமைப்புகள் என்னதான் விசாரித்துச் சாதித்தன?

பொருளாதாரக் குற்ற வழக்குகள் பலவற்றிலும் குற்றம் அம்பலமானதும் சிலரைக் கை காட்டுவதும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘அவர்கள் குற்றவாளிகள் இல்லை’ என்று விடுவிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அதானி, என்.எஸ்.இ முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணன், செபி முறைகேடுகளில் மாதபி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முறைகேடுகளில் சந்தா கோச்சார் என நீண்டுகொண்டே இருக்கிறது இந்தப் பட்டியல்.

அனுமார் வால் போல நீண்டுகொண்டே இருக்கும் பொருளாதாரக் குற்ற வழக்குகளால், நாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள் மற்றும் நீதி அமைப்புகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துகொண்டிருக்கிறது. நியாயமான, நேர்மையான விசாரணைகள் நடக்காதவரை, நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டும் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. அது தொடர்கதையாக நீளவே செய்யும்!

– ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *