
அன்புமணி எதிர்பார்க்காத ஒன்று இன்று நடந்துவிட்டது. பாமகவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட அன்புமணியை, அவரின் தந்தை ராமதாஸே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். இனி பாட்டாளிகளின் ஆதரவு யாருக்கு அதிகம் என்ற கேள்வி எழுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில், குறிப்பாக வட தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். 1991 தேர்தல் முதல் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், தனித்து நின்றாலும் பாமகவின் டிராக் ரெக்கார்டு மிக மிக முக்கியமானது. மாறி, மாறி கூட்டணி வைக்கிறார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அதிகளவில் எம்எல்ஏக்களை ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக்கு அனுப்பினார் ராமதாஸ். பாமகவினர் நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சரவைகளிலும் அங்கம் வகிக்கும் வகையில் காய்களை நகர்த்தியவர் ராமதாஸ். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்கான போராட்ட களத்திலும் முன்னணியில் நின்றவர் ராமதாஸ்.