
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
“திராவிட மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் ஆகிவிட்டது.” என்று விமர்சனம் செய்திருந்தார். இன்று அவர் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
முன்னதாக பொள்ளாச்சி தனியார் ஹோட்டலில் விவசாயிகள், தொழில் அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கள் இறக்குவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு விவசாயி,

“நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் கள் இறக்க அனுமதி கொடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். அங்கிருந்து அதிமுக நிர்வாகிகள், பௌன்சர்கள், பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி ஆகியோர் விவசாயியை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
விவசாயி தொடர்ந்து கேள்வி கேட்டதால் எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆனார். ஒரு கட்டத்தில் அவர், “உங்கள் ஒருவரின் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது. இங்கு பொதுவாக தான் பேச வேண்டும். கோரிக்கை மட்டும் வையுங்கள். கருத்து சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு கஷ்டம் இல்லை என்று சொல்லவில்லை. அதேநேரத்தில் மற்றவர்களின் மனம் புண்படக் கூடாது.” என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரப்பான சூழல் நிலவியது.