• September 9, 2025
  • NewsEditor
  • 0

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சக்திவாய்ந்த தலைவராக செங்கோட்டையன் இருக்கிறார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி வந்த பிறகு செங்கோட்டையனின் முக்கியத்துவம் குறைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் பதவிகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். பிறகு நடந்த தேர்தலில் அந்தியூரில் அ.தி.மு.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது. அதற்கு செங்கோட்டையன்தான் காரணம் எனச் சொல்லி, அவருக்குத் தெரியாமல் கட்சிக்குள் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் செங்கோட்டையன் கொதிநிலையின் உச்சத்துக்கே சென்றார். இதையடுத்து கோவையில் எடப்பாடிக்கு நடந்த அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பாராட்டு விழாவைப் புறக்கணித்தார். அதற்கு அழைப்பிதழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை எனக் கூறினார். கூடவே டெல்லி பா.ஜ.க தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டையன்

மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலால் அமைதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான், ‘அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாள்களில் எடப்பாடி தொடங்க வேண்டும்’ என செங்கோட்டையன் கெடு விதித்தார். இதையடுத்து செங்கோட்டையனிடமிருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பறித்து அதிர்ச்சி கொடுத்தார், எடப்பாடி. இதையடுத்து டெல்லிக்குப் புறப்பட்டார், செங்கோட்டையன். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “நான் ஹரித்வாரில் உள்ள கோயிலுக்குச் செல்கிறேன். பா.ஜ.க தலைவர்கள் யாரையும் சந்திக்கச் செல்லவில்லை” என்றார். எனினும் செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதை டெல்லியிலிருந்து திரும்பிய செங்கோட்டையனும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எனவே டெல்லி பயணத்தில் என்னதான் நடந்தது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக பா.ஜ.க-வின் மிக மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “டெல்லி சென்ற செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பில் பேசியவர், ‘தமிழகத்தில் தே.ஜ கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதை எடப்பாடியின் தலைமையிலான அ.தி.மு.க-வை வைத்து மட்டுமே சாதித்துவிட முடியாது. சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வியை இணைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். அப்போதுதான் தே.ஜ கூட்டணியும் வலுப்பெறும்.

அமித் ஷா
அமித் ஷா

அவர்கள் இல்லாமல் தேர்தலைச் சந்தித்ததால்தான் அ.தி.மு.க ஏழு தென் மாவட்டங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. 13 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தற்போது ஓ.பி.எஸ், டி.டி.வி வெளியில் சென்றுவிட்டார்கள். அவர்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கூட்டணிக்குச் செல்லலாம் அல்லது தனியாகவே வேட்பாளரை நிறுத்தலாம். அப்போது வாக்குகள் சிதறும். அது 2026 தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவர்கள் இல்லாமல் கூட்டணி பயன்படாத ஒன்றுதான். அவர்களும் எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளே வந்தால் தனக்கு ஆபத்து என எடப்பாடி செயற்கையாகப் பயப்படுகிறார். தனிநபரை விடக் கட்சிதான் முக்கியம். நான் போகும் இடங்களிலெல்லாம் நீங்கள் ஒன்றாகிவிட்டால் வெற்றிபெற்றுவிடலாம் என மக்கள் சொல்கிறார்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார். இதையெல்லாம் அமித் ஷா பொறுமையாகக் கேட்டிருக்கிறார். விரைவில் பல அதிரடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

சுப்புரத்தினம்

இதுகுறித்து ஓ.பி.எஸ்-ன் தேர்தல் பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான ஏ.சுப்புரத்தினத்திடம் கேட்டோம். “அண்ணன் செங்கோட்டையன் எங்களுடனும் பேசிக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க-விலிருந்து நீக்கிய பிறகும் அவரைச் சந்திக்க அமித் ஷா நேரம் கொடுத்ததே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான். எனவே இணைப்பு நடவடிக்கைக்கு அவர்களும் உடன்படுகிறார்கள் என்றுதான் நினைக்கிறோம். எனவே நிச்சயம் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வை விரைவில் பார்க்கலாம்” என்றார் நம்பிக்கையாக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *