
போபால்: மத்திய பிரதேசத்தில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோஹன் சிங் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சில குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து கடந்த 2017-ல் உத்தரவிட்டது. ஆனால் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாதம்தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.