
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகள் கத்தி, எண்ணெய், தேங்காய், பேட்டரி, செல்லோடேப், மிளகாய், லைட்டர், இ-சிகரெட் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அது போன்ற பொருட்களை பயணிகள் எடுத்து வந்தால் அதனைச் சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்வது வழக்கம்.
மும்பை விமான நிலையத்தில் அது போன்று பறிமுதல் செய்யப்படும் பொருட்களை விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் திருடி எடுத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்தப் பொருட்களை எடுத்துச்சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைத்து விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் எடுத்துச்சென்று விடுகின்றனர்.
விமான நிலைய பாதுகாப்பில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பயணிகளிடம் பறிமுதல் செய்யும் பொருட்களை மும்பை விமான நிலைய அலுவலகத்திற்கு அனுப்பி விடுவது வழக்கம். அவை அங்கிருந்து குப்பைத் தொட்டிக்குச் செல்லும். அல்லது தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கப்படும்.
எனவே பல ஆண்டுகளாக விமான நிலைய அதிகாரிகள் அப்பொருட்களை தங்களது சொந்த தேவைக்காக வீட்டிற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் திடீரென விமான நிலையத்தில் கடந்த மாதம் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிகாரிகள் இப்பொருட்களை எடுத்துச்செல்வது தெரிய வந்தது.
இதனால் அத்திருட்டில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம், ‘உடனே வேலையை ராஜிமானா செய்யுங்கள். அல்லது வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் அதிகமான அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இது குறித்து வேலையை இழந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”முதல் முறை தவறு செய்த எங்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் பணியிலிருந்து நீக்கிவிட்டனர்” என்று ஆதங்கப்பட்டார்.
மற்றொரு அதிகாரி இது குறித்துக் கூறுகையில், ”பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுகின்றன அல்லது பெட்டியில் அடைக்கப்பட்டு தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பயணிகளிடம் பறிமுதல் செய்த பொருளை எடுத்துக்கொள்வது பணிநீக்கம் செய்யும் அளவுக்கு ஒரு பெரிய குற்றமாக இருக்காது என்று நாங்கள் கருதினோம்.

பல ஆண்டுகளாக, பறிமுதல் செய்யப்பட்ட தேங்காய்கள், எண்ணெய் பாட்டில்கள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இது இடத்தை அடைத்துக்கொண்டு கிடந்ததால் அதனை எடுத்துச்சென்றோம்” என்று வருத்தப்பட்டார்.
15 அதிகாரிகளும் எந்த வித விசாரணையும் நடத்தப்படாமல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் ஸ்பேனர்கள், முகமூடி டேப், பொம்மை துப்பாக்கி, கயிறு, மெழுகுவர்த்தி, இடுக்கி, மசாலாப் பொருட்கள், சாமான்கள் சங்கிலி, பெப்பர் ஸ்பிரேயர், பெரிய குடை, பெரிய மட்டை, கொப்பரை மற்றும் மிளகாய்த் தூள் போன்றவற்றை எடுத்துச்செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தை அதானி நிறுவனம் நிர்வகித்து வருகிறது.