
அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரின் பதவியும் பறிக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் இப்படியான நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதனால் என்ன விளைவு வரும் என்பதை போகப் போகத் தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவை சென்ற அவர் அங்கிருந்து அவரின் ஆதரவாளர்களையும் சிலத் தலைவர்களையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் ஹரித்வாரில் உள்ள கோயிலுக்குச் செல்கிறேன். பா.ஜ.க தலைவர்கள் யாரையும் சந்திக்க புதுடெல்லி செல்லவில்லை” என கூறினார்.
9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. “கலங்க வேண்டாம்; நியாயமான கோரிக்கையைத் தான் வைத்துள்ளீர்கள்” என தொண்டர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.
“பா.ஜ.க தலைவர்களையல்ல, ராமரை சந்திக்கச் செல்கிறேன். கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்,” என்றார்.
ஆனால், அவர் செல்லும்போதே டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது.

நேற்று டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரின் இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு முயற்சியில் ஏற்பட்ட அதிர்வுகள் குறித்து செங்கோட்டையனிடம் அமித் ஷா விரிவாக கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.