
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 2026 சட்டப்பேவைத் தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், கொமதேக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர தேமுதிக உட்பட சில கட்சிகளுடனும் திமுக பேசி வருகிறது. அதேநேரம், கூட்டணி ஆட்சிக்கான பேச்சுகள் வலுப்பதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக விரும்புகிறது. அதற்கேற்ப கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் மற்றும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு அதன் தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.