• September 6, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனரான ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் அரசியல் நிகழ்வாக உருமாறியிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை ஒரே மேடையில் பங்கேற்றதில் ஆரம்பித்து, ‘ஜி.கே. மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தது தமிழர்களுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்’ என்ற அரசியல் அட்டாக் வரையிலான பரபர பட்டாசுகளைக் கிளப்பியிருக்கிறது நிகழ்ச்சி.

இந்த நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனைச் சந்தித்து கேள்விகளை முன்வைத்தேன்…

“2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், ஜி.கே மூப்பனாரின் நினைவேந்தல் நிகழ்வையே தேசிய ஜனநாயகக் கூட்டணி மேடையாக மாற்றிவிட்டீர்களே?”

“மக்கள் தலைவர் மூப்பனாரின் 24-வது நினைவேந்தல் நிகழ்வு, அரசியலைக் கடந்த நிகழ்வு. இந்த ஆண்டு எடப்பாடியாரும், நிர்மலா சீதாராமனும் பங்கேற்றதுபோல், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆக அதனை அரசியல் மேடையாக மாற்றிவிட்டோம் என்பதில் உண்மையல்ல.”

மூப்பனார் நினைவு தின நிகழ்வு

“‘தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள்தான் தமிழரான ஜி.கே மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தனர்’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரைக் குறிப்பிடுகிறார்?”

“வரலாற்று உண்மைத் தகவல்களை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. அதற்குமேல் அந்த விவகாரத்தில் நான் ஏதும் பேச விரும்பவில்லை.”

“த.மா.க மீது பா.ஜ.க-வினருக்கு உண்மையிலேயே பற்று இருந்தால் உங்களை மத்திய அமைச்சராக்கியிருப்பார்கள்தானே?”

“`வளமான தமிழகம், வளமையான பாரதம்` அமைக்கும் நோக்கில்தான் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் உள்ளோம். மற்றபடி எந்தவொரு பதவியை மையப்படுத்தியும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவில்லை. தி.மு.க-வை வீழ்த்தி நாங்கள் வெல்ல வேண்டும். த.மா.க-வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்”

ஜி.கே வாசன்
ஜி.கே வாசன்

“உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்த அ.தி.மு.க-வை விட்டுவிட்டு எதுவுமே தராத பா.ஜ.க-வுடன் 2024-ல் ஏன் கூட்டணி வைத்தீர்கள்?”

“2021 சட்டமன்றத் தேர்தலின்போது ‘எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும்’ என்பதே த.மா.கா-வின் விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதில் மிக உறுதியாக இருக்கிறோம். ஆனால், 2024-ல் பிரதமர் மோடி தொடர வேண்டுமா… வேண்டாமா என்ற கேள்வி வரும்போது, ‘வலிமையான பாரதம்’ அமைத்த பா.ஜ.க ஆட்சியில் தொடர வேண்டும் என முடிவெடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்தோம். இன்றைக்கு முதல்நிலையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க-வும், மிகப்பெரும் கட்சியாக வளர்ந்துவரும் பா.ஜ.க-வும் கூட்டணியாக இணைந்திருக்கிறது. அதில் முக்கியக் கட்சியாக த.மா.கா-வும் பயணிக்கிறது”

“தமிழக அரசியலில், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை என்ற விமர்சனம் இருந்துவருகிற சூழலில், மீண்டும் அ.தி.மு.க-வை ஆளுங்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என எப்படிச் சொல்கிறீர்கள்?”

“தி.மு.க ஆட்சிக்கு எதிரான மனநிலை தமிழகம் முழுக்க உருவாகியிருக்கிறது. அதைப் பிரதிபலிக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ‘எதிர்க்கட்சித் தலைவராக அவர் முறையாகச் செயல்படவில்லை’ என்ற விமர்சனமெல்லாம் அவரது பிரசாரப் பயணத்துக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டது.”

மோடி – அமித் ஷா

“பா.ஜ.க தரப்பில் ‘கூட்டணி ஆட்சி அமைப்போம்’ என்கிறார்கள். அ.தி.மு.க தரப்பில் ‘தனித்தே ஆட்சி அமைப்போம்’ என்கிறார்கள். த.மா.கா-வின் விருப்பம் என்ன?”

“2026 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி அறுதிப்பெரும்பான்மையில் வெல்லவேண்டும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராவார். மற்ற விவகாரங்களில் அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்து எடுக்கும் முடிவுகளுக்குத் துணை நிற்போம்.”

“2026 தேர்தலில், தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பு பா.ஜ.க-விடம் இருக்குமா அல்லது அ.தி.மு.க-விடம் இருக்குமா..?”

(கோபத்துடன்) “‘கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டு, கூட்டணி உடைய வேண்டும்’ என வேண்டாதவர்கள் முயல்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. தொகுதிப் பங்கீடு என்றாலே எல்லோரும் கலந்துபேசித்தான் முடிவெடுப்போம். தி.மு.க-வைப் போல பெரிய அண்ணன் மனப்பான்மையில் அ.தி.மு.க கூட்டணி இருக்காது.”

“என்.டி.ஏ கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வுக்குத்தான் தொகுதிகளைப் பங்கிட்டுத் தரும் உரிமை இருக்கிறது எனச் சொல்ல மறுப்பது ஏன்?”

“கலந்துபேசி முடிவெடுப்போம். அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற பெரிய கட்சிகளுக்குக் கூட்டணி விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பிருக்கிறது.”

எடப்பாடி பழனிசாமி

“எடப்பாடி பழனிசாமியை நம்பகத்தன்மையற்ற தலைவர் என்கிறாரே தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா?”

“தே.மு.தி.க எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறதென இன்னும் அறிவிக்கவில்லை. ஆகையால் அவர்களைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது”

“தி.மு.க கூட்டணி வலுவாக இருந்துவருகிறது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியவில்லையே?”

“தி.மு.க கூட்டணிக் கட்சியினர் நியாயமான மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் இந்தச் செயல்பாடுகள் எங்களுக்குச் சாதகமாக அமையும்”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *