
மும்பை: மனித வெடிகுண்டுகளுடன் 34 வாகனங்கள் தயார் நிலையில் நகருக்குள் நுழைந்துள்ளதாகவும், மும்பையைத் தாக்கி அழிக்கப் போவதாகவும் மிரட்டல்கள் வந்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்துக்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை நிரப்பிய 34 வாகனங்கள் மும்பை நகருக்குள் நுழைந்து இருப்பதாகவும், அது வெடித்தால் மொத்த மும்பை நகரமும் அழிந்து விடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலும், மும்பை போக்குவரத்து போலீஸாரின் வாட்ஸ்அப் நம்பருக்கும் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. மேலும், அந்த மிரட்டல் செய்தியில், லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்து இந்த தாக்குதலை நிகழ்த்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள மும்பை போலீஸார், மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த மிரட்டல் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.