
மதுரை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தொடர்ந்து இரு முறை போட்டியிட்டு தான் வெற்றி பெற்ற மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன், வீதி வீதியாக சென்று தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மேயர், கவுன்சிலர்களை வர வேண்டாம் என்று அவர் கூறியதால், கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்திய தொகுதியில் 2016, 2021 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2026-ம் ஆண்டு தேர்தலிலும் தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற நாள் முதல் 6 மாதத்துக்கு ஒரு முறை தனது தொகுதி செயல்பாட்டு அறிக்கையை மக்களிடம் சமர்ப்பித்து அவர்களின் கோரிக்கைகளை, குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்.