
எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசியல் தெரிந்த அமைச்சர்கள் அடுத்த தேர்தலிலும் தாங்கள் ஜெயிப்பதற்கான அடித்தளத்தை அதிகாரத்தில் இருக்கும் போதே போட்டுவைப்பார்கள். ஆனால், விவரமாக அப்படி செயல்படாததால், 2021-ல் அமைச்சராக இருந்தும் தோற்றுப் போனார் கே.சி.வீரமணி. அப்படி அதிகாரத்தைத் தொலைத்தவர், பட்டும் திருந்தாமல் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட அதிமுககாரர்கள்.
அதிமுக ஆட்சியில் பசையுள்ள பத்திரப்பதிவுத் துறைக்கு அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்த இவர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட அதிமுக-வை தனது பிடிக்குள் வைத்திருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சிக்குள் தனது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொண்ட வீரமணி, தனக்கு போட்டியாக வருவார்கள் என்று கருதியவர்களை எல்லாம் ‘கவனமாக’ பார்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் உண்டு. இதனால், முன்னாள் அமைச்சர்களான பாண்டுரங்கன், வி.எஸ்.விஜய், நிலோபர் கபீல், எம்.எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் அரசியலில் தங்களுக்கான இடத்தைத் தொலைத்தார்கள்.