
சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, பகல் 11.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் செல்கிறார். அங்கு நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். பகல் 1.20 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.35 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.