• September 1, 2025
  • NewsEditor
  • 0

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், “பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.

ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு.

அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.

சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த ‘Cologne Library Visit’ அமைந்தது” என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகம் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டதாகப் பதிவிட்டிருக்கும் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு அதை மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலினை வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில், “ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.

சூரியன் திரைப்படத்தில், அண்ணன் கவுண்டமணி அவர்களின், “போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு” என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது.

முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல.

முதலமைச்சர் ஸ்டாலின், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழகத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *