
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கடந்தமுறை அதிமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இம்முறை அதை உடைக்க நினைக்கிறது திமுக. அதற்காகவே இதுவரை அரசு முறை பயணங்களையும் சேர்த்து 6 முறை இந்த மாவட்டத்துக்கு வருகை புரிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும், இம்முறையும் இங்கே திமுக கூட்டணிக்கு வேலை இல்லை என்கிறது அதிமுக கூட்டணி.
அண்மையில் தருமபுரிக்கு வருகை தந்த முதல்வர், இந்த மாவட்டத்துக்கு கடந்த நாலரை ஆண்டுகளில் பலமுறை வந்து போயிருப்பதையே பெருமிதமாக பேசினார். இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், “கடந்த முறை மாவட்டத்தில் 5 தொகுதிகளும் கைநழுவிப் போனதுபோல் இம்முறையும் போய்விடக் கூடாது என்பதற்காகவே தருமபுரிக்கு அடிக்கடி வந்து போகிறார் முதல்வர். ஆனால், எத்தனை முறை வந்தோம் என்பதை விட மாவட்டத்துக்காக என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்” என்கிறார்கள்.