
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் இடம்பெறாதது குறித்து நியூஸ் 24 என்ற ஊடகத்திற்கு முகமது ஷமி பேட்டி அளித்திருக்கிறார்.
அதில், ” ஆசியக்கோப்பை தொடரில் என்னை தேர்வு செய்யவில்லை என்று நான் யாரையும் குறைக்கூற மாட்டேன்.
நான் இந்திய அணிக்கு தகுதியாக இருந்தால் தேர்வு செய்யுங்கள். இல்லையென்றாலும் அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
இந்திய அணிக்காக சிறந்தவற்றை செய்வது தேர்வாளர்களின் பொறுப்பு. எனக்கு என் திறமைகளின் மீது நம்பிக்கை இருக்கிறது.

வாய்ப்பு கொடுத்தால் திறமையை நிரூபிப்பேன். சர்வதேச போட்டிகளில் என்னை எடுத்துக்கொள்ளவில்லையெனில், நான் உள்நாட்டு போட்டிகளில் ஆடுவேன்” என்று கூறியிருக்கிறார்.
ஓய்வுப் பற்றிய கேள்விக்கு, ” ஓய்வைப் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. அந்த நிலைமை எனக்கு இன்னும் வரவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…