
உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே கணவனை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, ஊதா நிற டிரம்மில் அடைத்த மனைவியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு பிறகு ஆண்கள் உஷாரடைந்துள்ளனர். மனைவி யாரையாவது காதலிப்பது தெரிந்தால், காதலனுடனே சென்றுவிடும்படி கூறிவிடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர், கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 10 முறை வீட்டை விட்டு ஓடியுள்ளார். அங்குள்ள ராம்பூர் என்ற இடத்தில் வசிக்கும் சுக்ராம் என்பவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்த மேகா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலிக்க ஆரம்பித்தார். ஒருசமயத்தில் காதலனுடன் ஓடிவிட்டார்.
மனைவியை அழைத்து வரும்படி ஊர்பெரியவர்கள் சுக்ராமை நிர்பந்தித்தனர். இதனால் மனைவி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
10 முறை காதலனுடன் ஓடிய பெண்
சுக்ராம் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாலும், அவரது மனைவி தொடர்ந்து வீட்டில் இருக்கவில்லை. அடிக்கடி தனது காதலனை தேடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு முறையும் சுக்ராம் சென்று கெஞ்சிக்கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அவர் வீட்டிற்கு அழைத்து வருவதும், மேகா மீண்டும் காதலனுடன் ஓடுவதும் தொடர்கதையாக இருந்தது.
இப்படியே கடந்த ஒரு ஆண்டில் தனது காதலனுடன் 9 முறை ஓடிவிட்டார். கடைசியாக, கடந்த 8 நாள்களுக்கு முன்பு தனது காதலனுடன் ஓடிவிட்டார். இம்முறை சுக்ராம் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு சென்று, இது தொடர்பாக புகார் அளித்தார்.
தனது மனைவிமீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவரை தன்னிடம் அழைத்து வந்தால் போதும் என்றும் சுக்ராம் தெரிவித்தார்.
போலீஸாரும் அப்பெண் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து, அழைத்து வந்து மீண்டும் சுக்ராமிடம் ஒப்படைத்தனர். ஆனால் அடுத்த நாளே மீண்டும் மேகா தனது காதலன் வீட்டிற்கே சென்றுவிட்டார்.
`15 நாள் காதலன், 15 நாள் கணவன்’
உடனே சுக்ராம் மீண்டும் மேகா இருக்கும் அவரது காதலன் வீட்டிற்கு சென்று, தன்னுடன் வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மேகா இம்முறை “வரவே மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து, வேறு வழியில்லாமல் சுக்ராம் கிராம பஞ்சாயத்தை கூட்டி தனது பிரச்சினையை தெரிவித்தார்.
பஞ்சாயத்தார் மேகாவையும் பஞ்சாயத்துக்கு வரவழைத்தனர். பஞ்சாயத்தார் மேகாவிடம் இது குறித்து பேசினர். கணவனுடன் வாழும்படி பஞ்சாயத்தார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு மேகா சம்மதிக்கவில்லை.

சுக்ராம், தனது மனைவி தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இதனால், இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் பஞ்சாயத்தார் தலையைப் பிய்த்துக்கொண்டனர்.
அந்த நேரத்தில், மேகாவே இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்வதாகக் கூறினார். உடனே அந்த தீர்வை சொல்லும்படி பஞ்சாயத்து பெரியவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனது காதலனுடனும் கணவனுடனும் மாறி மாறி வாழ்வதாக மேகா தெரிவித்தார்.
அதாவது மாதத்தில் 15 நாள் கணவன் வீட்டிலும், 15 நாள் காதலன் வீட்டிலும் வாழ்வதாக அறிவித்தார்.

விட்டுக்கொடுத்த கணவன்
மேகா தெரிவித்த முடிவை கேட்டு பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முடிவு புதிதாக இருந்தாலும், அதை எவ்வாறு அமல்படுத்துவது என்று பஞ்சாயத்தார் குழம்பினர்.
மேகாவின் கணவனிடம் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறாயா என்று பஞ்சாயத்து பெரியவர்கள் கேட்டனர். தனது மனைவியின் முடிவை கேட்டு அதிர்ச்சியில் இருந்த சுக்ராம், கைகளை இணைத்து கும்பிட்டு, “எனது மனைவி அவளது காதலனுடனேயே வாழட்டும், எனக்கு வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். இதையடுத்து, பஞ்சாயத்து தலைவர்கள் அதிர்ச்சியுடன் கலைந்து சென்றனர்.