
மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவின் போது ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பந்தல்களுக்கு எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் காலையிலேயே தங்களது குடும்பத்தோடு சென்று விநாயகர் சிலைகளை தங்களது வீடுகளுக்கு வாங்கி வந்து பூஜை செய்ய ஆரம்பித்துள்ளனர். இது தவிர விநாயகர் மண்டல்கள் ராட்சத விநாயகர் சிலைகளை ஏற்கனவே ஊர்வலகாக எடுத்து வந்து பந்தல்களில் பிரதிஷ்டை செய்திருந்தனர்.
இன்று காலையில் அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. இன்று காலையில் இருந்தே மும்பை தெருக்கள், சாலைகளில் மக்கள் விநாயகர் சிலையை சுமந்தபடி கணபதி பப்பா மோரியா என்று கோஷமிட்டபடி சென்றனர். இதனால் பல சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மும்பையில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான விநாயகர் மண்டல்கள் இருக்கிறது. இந்த மண்டல்கள் பெரிய விநாயகர் சிலைகளை எடுத்து வந்து 10 நாட்கள் வைத்திருந்து பூஜை செய்து பின்னர் ஊர்வலமாக எடுத்து எடுத்துச்சென்று கடலில் எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம்.
சில விநாயகர் சிலைகள் 2 அல்லது 5 மற்றும் 7வது நாட்களிலும் கடலில் கரைக்கப்படுவது வழக்கம். வீடுகளில் வைத்து பூஜை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க மும்பை மாநகராட்சி நிர்வாகம் மும்பையின் பல்வேறு இடங்களில் செயற்கை குளங்களை அமைத்து இருக்கிறது. மும்பை பரேலில் வைக்கப்பட்டுள்ள 26 அடி பரேல் மகாராஜா கணபதி இந்த ஆண்டு பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தேரி சாக்கிநாக்கா மகாராஜா கணபதி சிலை 35 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரேரோடு பகுதியில் 23 அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் கும்பகர்ணன் நாக்கில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
.
விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த வித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 17 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 36 துணை போலீஸ் கமிஷனர்களும், 51 உதவி போலீஸ் கமிஷனர்களும் அடங்கும். மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக் ராஜா, வடாலா ஜி.எஸ்.பி போன்ற பிரபல கணபதி மண்டல்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

லால்பாக் ராஜாவை தரிசிக்க மக்கள் நேற்று முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த லால்பாக் ராஜாவை தரிசிக்க மும்பை மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். எனவே அங்கு போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸார் மட்டுமல்லாது ஊர்க்காவல் படையினர், ரயில்வே போலீஸார், மாநில அதிரடி படை போன்ற பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா மட்டுமல்லாது ட்ரோன்கள் மூலமும் கூட்டத்தை கண்காணிக்க மாநில போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மாநில அரசு முதல் முறையாக கணபதி விழாவை மாநில விழாவாக அறிவித்து இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி மண்டல்களுக்கு மாநில அரசு நிதியுதவியும் அறிவித்து இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநகராட்சி நிர்வாகம் அனைத்து சாலைகளையும் அவசர அவசரமாக செப்பனிட்டு வந்தது. ஆனாலும் இன்னும் பணிகள் முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மும்பையில் தமிழ் அமைப்புகளும் தாராவி, சயான் கோலிவாடா, செம்பூர், கோரேகாவ் போன்ற பகுதியில் விநாயகர் சிலைகளை எடுத்து வந்துபிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.