
சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் விண்ணப்பிக்க வழியில்லாமல் அதற்கான இணையதள பக்கத்தை முடக்கி வைத்திருப்பது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இணையதள பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கூறி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க நிர்வாகி வே.ஈஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கல்வி உரிமை சட்டத்தின்படி மத்திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசும் நிதி கிடைப்பதை காரணம் காட்டாமல் நிதியை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.