
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் அதிகாரிகள், கவுன்சிலர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குள் இப்பிரச்சினைக்கு திமுக மேலிடம் தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், வரி விதிப்புக் குழுவின் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், 2 உதவி ஆணையர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மண்டலத் தலைவர்கள் 5 பேர், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவியும் பறிக்கப்பட்டது. ஆனால், கணவர் கைது செய்யப்பட்ட நிலையிலும் மேயர் பதவியில் தொடர்வது, அவருக்கும், மாநகராட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்த வேகம், தற்போது அதிமுகவிடம் இல்லை. மேயர் மாற்றத்துக்கு குரல் கொடுப்பதில் அதிமுக தரப்பு அமைதி காப்பது திமுகவினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.