
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி வருகிறார். இதனால் அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சர் மெய்யநாதனை ரகுபதி தரப்பு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மெய்யநாதனின் பெயரும் படமும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக நீண்ட காலமாகவே புகைச்சல் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு, பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது திமுக. இதற்காக முதலில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் அமைச்சர் மெய்யநாதன் படமோ பெயரோ இல்லை. அதன் பிறகு இதைச் சுட்டிக்காட்டிய பிறகு மெய்யநாதனின் படமும் பெயரும் போஸ்டரில் சேர்க்கப்பட்டது.