
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து எந்த அரவமும் இல்லாமல் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் வழக்கமான ‘மவுனத்தில்’ இருக்கிறார்.
ரங்கசாமியை கைக்குள் வைத்துக் கொண்டு இம்முறையும் புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துவிட வேண்டும் என கணக்குப் போடுகிறது பாஜக. ஆனால், பிரதமருக்கு நெருக்கமான புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் தொடக்கத்தில் இணக்கமாக இருந்த ரங்கசாமி இப்போது அவரோடு முரண்பட்டு நிற்கிறார். சுகாதாரத் துறை இயக்குநராக ஆளுநர் ஒருவரை நியமிக்க, அதை நிராகரித்து முதல்வர் ஒருவரை நியமித்தார். இது இருவருக்கும் இடையில் மோதலாக வெடித்தது. இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியைக் காட்டும் விதமாக சட்டப் பேரவைக்கு போகாமல் தவிர்த்தார் முதல்வர் ரங்கசாமி.