
சென்னை: பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நாளை தமிழகம் வருகிறார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராகவும், தெலங்கானாவை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இண்டியா கூட்டணி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கடந்த 24-ம் தேதி சென்னை வந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.