
தமிழக வெற்றிக் கழகம் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை மண்ணில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 தான் மாநாடு நடக்கும் தேதி என்றாலுமே கூட நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே சமூக வலைதளங்களில் மாநாடு குறித்த பகிர்வுகள் வலம் வரத் தொடங்கிவிட்டன. மதுரை மக்கள் ஏராளமானோர் மாநாட்டு பந்தலை கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க சென்றது தவெக தொண்டர்களுக்கும் இன்னும் உற்சாகத்தை கூட்டியது.
மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் முதற்கொண்டு ஆளுங்கட்சியான திமுக தொடங்கி நாம் தமிழர் வரை பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்கள் அக்குவேறு ஆணிவேராக ‘டீகோடிங்’ செய்யத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் ‘அங்கிள்’ என்று விளித்ததை திமுகவினர் ரசிக்கவில்லை. அமைச்சர்கள் முதல் ஐடி விங் வரை விஜய் மீதான விமர்சனக் கணைகளை வீசி வருகின்றனர்.