
சென்னை: இந்திய அஞ்சல்துறையில் பதிவு தபால் சேவையை செப்.1-ம் தேதி முதல் நிறுத்தி, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தற்போது அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இந்திய அஞ்சல் துறை சேவை “கம்பெனி மெயில்” என்ற பெயரில் கடந்த 1766-ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சியில் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இது, 1854-ம் ஆண்டு டல்ஹவுசி பிரபுவால் சீரமைக்கப்பட்டு, அஞ்சல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே அதிகாரப்பூர்வ இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்ட ஆண்டாக கருதப்படுகிறது.