
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
தூத்துக்குடியில் வி.சி.க கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பாஜக அரசு திணித்துள்ளது. ஏற்கெனவே குடியரசு துணைத்தலைவராக இருந்த தன்கரை பதவி விலக வைத்து சிறை வைத்துள்ளனர். நிலை என்ன என்பது கூடத் தெரியவில்லை.
ஒரு நாட்டின் குடியரசு துணை தலைவருக்கே இந்த நிலை என்றால் குடிமக்களுக்கு என்ன நிலை என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இது தமிழ்நாட்டிற்கான தலைவர் பதவி அல்ல
தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக ஆக்குவோம் என்று ஒரு சிலர் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இது தமிழ்நாட்டிற்கான தலைவர் பதவி அல்ல. இந்தியாவிற்கான தலைவர் பதவி.
எனவே இதனை தமிழர் என்கிற அடையாளம் முன்னிநிறுத்துவதில் எந்த பலனும் கிடையாது. பா.ஜ.கவா, பா.ஜ.க அல்லாத ஜனநாயக சக்திகளாக என்றுதான் அணுக வேணடியுள்ளது.
சுதந்திரமாக அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்து வழங்க உள்ள ஒருவரை குடியரசு துணைத் தலைவராக காட்ட வேண்டும். அதனால், சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
இந்த தேர்தல் வழக்கமான சராசரியான தேர்தலாக அல்லாமல் தன்கருக்கு நேர்ந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக சிந்தித்து சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்கள்
தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் வி.சி.க இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. ஒரே நிலைப்பாடுதான். அதே வேளையில் மாற்று வழியை தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் முன்வைக்கிறோம்.
அரசாணை 152 பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதனை புதுப்பிக்க வேண்டும் என்று போராடிவரும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.
தனியார் மயத்தை எதிர்த்து மக்களோடு போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் வி.சி.கதான்.
சென்னை பெரு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்து ஆதரவாக இருக்கிறோம். முதல்வரை சந்தித்து தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்.
அந்த தொழிலையே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்றுக் கருத்தை முன்வைத்தோம். அதை புரிந்து கொள்ளாமல் தூய்மை பணியாளர்களுக்கு எதிரான கருத்து என்று தவறான சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக நிரந்தர படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அந்த பணியை செய்ய ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையில் இரண்டாவது கருத்தாக முன் வைக்கிறோம்.
கண்ணகி நகரில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குழந்தைகளின் உயர்கல்வி வரை ஆகும் செலவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
வரலட்சுமி குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்திற்க்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும். அரசு சார்பிலும் கூடுதல் உதவி வழங்க வேண்டும்” என்றார்.