
இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த மன்னர், சந்திரகுப்தர் மவுரியர். இந்தியாவின் முதல் பேரரசர் என்று கணிக்கப்படும் இவர் உருவாக்கிய மவுரிய பேரரசு, பல்வேறு பகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் அடக்கி இருந்தது. சந்திரகுப்தர், அவ்வாறு போரில் வென்றதற்கு, அவருடைய ராஜகுரு, அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியரே காரணம் என்பார்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி உருவான திரைப்படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’.
இந்தப் படத்தைக் கோவையைச் சேர்ந்த சி.கே.சச்சி இயக்கினார். எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் உறவினரான இவருடைய இயற்பெயர் சி.கே.சதாசிவம். அந்த காலத்திலேயே சட்டம் படித்திருந்த இவர், சினிமா ஆர்வத்தால், லண்டனில் திரைப்பட இயக்கம் குறித்து கற்றுவிட்டு, எல்லீஸ்ஆர்.டங்கனின் ‘சதிலீலாவதி’யில் பணிபுரிந்தார். பின்னர் அவர் இயக்கிய படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’.