
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணி இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.