
திரைப்பட இயக்குநர் அமீர் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள். திமுகவை எதிர்த்து பேசவே மாட்டார்கள் என்று என்னை சொல்வார்கள்.
ஒரு திரைப்பட இயக்குநராக அறியப்பட்ட நான் திமுகவை எதிர்த்துதான் பொதுவாழ்க்கைக்கே வந்தேன்.
அன்று எதிர்க்க வேண்டிய தேவையும் இருந்தது. அதேபோல, இன்று ஆதரிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
அதற்கு காரணம் பாசிச, சனாதனக் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காகத் தான்.
ஓட்டு போடுவதும், ஓட்டு வாங்குவதும் எப்படி ஜனநாயகமோ, அதேபோல ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் அரசைக் கேள்வி கேட்பதும் ஜனநாயகம்தான்.
அந்த அடிப்படையில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டியது திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்டாயக் கடமையாக இருக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம்.
இந்தச் சட்டம் நிறைவேறும் வரைக்கும் தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்போம்.
ஆணவக்கொலையில் நான் பார்க்கும் விஷயம் என்னவென்றால், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பதால் கொலைகள் நடப்பதில்லை.

‘நான் தான்’ என்ற உயரிய அகங்காரத்தினால்தான் இதுப்போன்ற கொலைகள் நடக்கிறது. இது ஒரு நோய். இந்த நோய் கலையப்பட வேண்டும்.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தொடர்ந்து இதற்காக நாம் போராடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.