
புதுடெல்லி: சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா நேற்று சிக்கிம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
கர்நாட மாநிலத்தின் சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திரா (50). இவர் மற்றும் இவரது சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு சொந்தமான 30 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புடைய தங்க நகைகள, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 4 வாகனங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. மேலும் 17 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வங்கி லாக்கர்களை முடக்கியது.