
காஞ்சிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் க.பழனிசாமி நேற்று செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார்.
செய்யூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் மத்தியில் அவர் பேசியது: இந்தப் பகுதி விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதி. ஆனால், திமுக அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருமுறை பயிர்கடன்களை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம், ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன.