
சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு நாகரிகமான மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கால் – கை வலிப்பு சங்கம் (எபிலிப்சி) சார்பில் கால் – கை வலிப்பு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்த ‘இகான் – 2025’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. 4 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தை மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி நேற்று மாலை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார்.
சங்கத்தின் தலைவர் பி.சதீஷ் சந்திரா, பொதுச்செயலாளர் பிந்து மேனன், இந்திய கால் – கை வலிப்பு சொசைட்டி தலைவர் சரத் சந்திரா, பொதுச்செயலாளர் விநயன், இகான் 2025 அமைப்பின் தலைவர் நடராஜன், செயலாளர் மால்கம் ஜெயராஜ் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னணி நரம்பியல் நிபுணர்கள், வலிப்பு நோய்களின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.