
முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் வாக்குமூலம் வழங்க சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 மற்றும் 23, 2023 அன்று அதிபர் ரணில் மற்றும் அவருடன் 10 நபர்கள் தனிப்பட்டமுறையில் லண்டன் பயணம் செய்ததாகவும் அதில் அரசு பணம் செலவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ரணில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஐக்கிய இராச்சியம் பயணம் செய்ததாக இந்தியா டுடே வலைதளம் தெரிவிக்கிறது. இந்த தனிப்பட்ட பயணத்துக்கு 1.7 கோடி ரூபாய் செலவானதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முன்னதாக அதிபரின் செயலராக பணியாற்றிய சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் அன்று விக்ரமசிங்கவுக்கு சம்மன் அனுப்பிய CID, நேரில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது. தனது வழக்கறிஞர் மூலம் வெள்ளிக்கிழமை ஆஜராவதாக பதிலளித்துள்ளார் விக்ரமசிங்க. அதன்படி புலானாய்வுத்துறை அலுவலகம் சென்றுள்ளார் விக்கிரமசிங்க.
இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டாலும், வாக்குமூலம் அளித்தபிறகு மாலையில் விடுவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.