
சசிகலா குறித்து யூ டியூப்பில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா ஆதரவாளர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.ஆர்.சுரேஷ் என்பவர் தலைமையில் வந்த ஆதரவாளர்கள் அளித்த புகார் மனுவில், “அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை இழிவுபடுத்தும் வகையிலும் அவர்களின் பெண்மைக்கும், அதிமுக நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் ‘MAI Chennai 360’ என்ற YouTube சேனலில் திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் என்பவர் பேசியுள்ளார்.
வி.கே.சசிகலாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் குடியாத்தம் குமரன் பேசியுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மனக்குமுறலையும், மன உளைச்சலையும் உண்டாக்கி உள்ளது.
எனவே MAI Chennai 360 YouTube சேனலில் பரப்பப்பட்டுள்ள வீடியோவை தடை செய்து, திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் மீது சட்டப்படியான கைது நடவடிக்கை எடுத்தும், MAI Chennai 360 YouTube சேனலை நிரந்தரமாகத் தடை செய்யவும் வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்கள், “கோடிக்கணக்கான தொண்டர்களால் பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சசிகலா குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுத்தும் பேசிய குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர் பேசிய யூடியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். குடியாத்தம் குமரன் இனி இதுபோன்று பேசினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்” என்றனர்.
வழக்கறிஞர் ஸ்டாலினுடன் சசிகலா ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.