
நெல்லையில் இன்று நடைபெறும் பா.ஜ.க பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுப் பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார்.
அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மிஸ்டர் பீeம் என்று நடிகர் விஜய் கூறுவதை மக்கள் ரசிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இவர் பேசுகிறார்.
புதிய வரவு நம்மை ஒன்றும் செய்யாது. பா.ஜ.க பலம் பொருந்திய கட்சியாக வந்து கொண்டிருக்கிறது. வாக்குகளை அதிகப்படுத்தி வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவிற்கும் எங்களுக்கும்தான் போட்டி. தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டாம். தாமரை தண்ணீரில் வளரப்போகிறது, மலர போகிறது. அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு பா.ஜ.க வளரப்போகிறது. இதனைத் தம்பி விஜய் பார்ப்பார். தமிழக முதல்வர் தன்னை அப்பா என்று கூப்பிடச் சொல்கிறார்.
விஜய் அங்கிள் என்று குறிப்பிடுகிறார். விஜய்க்கு வசனம் எழுதிக் கொடுத்தவர் அவ்வாறு எழுதிக் கொடுத்துவிட்டார் போல. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி பொருந்தாதது என்று விஜய் கூறுகிறார். அவருக்கு என்ன அரசியல் தெரியும்? அரசியல் ஞானம் இருக்கின்றதா? கச்சத்தீவு மீட்பு பற்றிப் பேசுகிறார். இதிலிருந்து அவருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் என்ன செய்தார் என்று கேட்கின்றார்.

சினிமா வளர்ச்சி கண்டுள்ளது இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். நடிகர் விஜய் தனி விமானத்தில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார். அந்த அளவிற்கு விமான நிலையம் முன்னேறி இருக்கிறது. நாடு முன்னேறி இருக்கிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தை எந்த வித பிரச்னைகளும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் விஜய்யால் ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடிந்ததா? ஒரு கொடியை ஒழுங்காக நட்ட முடிந்ததா? ஆகவே இவர் சொல்வதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
இரு மொழிக்கொள்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. அனைவரும் அதில்தான் படித்துக் கொண்டு வந்தோம். நாடு விரிவடையும் போது தேசம் விரிவடையும்போது உலக அரங்கில் நாடு முன்னேறும் போது மூன்று மொழி தேவைப்படுகிறது. கர்நாடகா முதல்வர் சித்தாராமையாவிற்கு மூன்று மொழிகளில் ட்வீட் செய்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தனியார்ப் பள்ளியில் இரண்டு மொழிதான் சொல்லிக் கொடுக்கிறீர்களா? என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

தி.மு.க கட்சிக்காரர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழிகள் உள்ளன. மூன்று மொழி படித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ந்து இருக்கிறது. அதில் அனைவரின் பங்கு இருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் ஆட்சி செய்த போது இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழைப் பற்றிப் பேசும் உங்களுக்குத் தகுதி உள்ளதா? தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்” என்றார்.