
புதுடெல்லி: “நான் ஓர் அரசியல்வாதி அல்ல, குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் பதவி அல்ல. அதனால்தான், குடியரசு தலைவர் பதவிக்குப் போட்டியிட ஒப்புக்கொண்டேன்” என்று இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில், அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங்கும் உடன் இருந்தார்.