
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அனைத்து தரப்பினரும் கோயிலுக்கு வந்து தங்கி தரிசனம் செய்யும் வகையில், சென்னையைச் சேர்ந்தவரும், சுவாமிமலை சுவாமியை குலதெய்வமாக வழிபடுபவருமான ஒருவர் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன விடுதி கட்ட முடிவெடுத்தார்.
அதன்படி, சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி நகரில் 8,000 சதுரடியில் இடத்தை தனது பெயரில் வாங்கி, அதில் 4 கட்டிடங்களில் மொத்தம் 16 அறைகளுடன் தங்கும் விடுதியை கட்டினார். இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஏப்.5-ம் தேதி சுவாமிமலை கோயிலுக்கு தானமாக அந்த விடுதியை வழங்கினார். இந்நிலையில், அந்த விடுதியில், கோயில் நிர்வாகம் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அண்மைக்காலமாக அந்த விடுதி கட்டிடங்கள் செடி, கொடிகள் மண்டி சேதமடைந்து வருகின்றன.