
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி காளியப்பன் என்பவரது மகன் காளீஸ்வரன் ஶ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த கம்பியை எடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இறந்த கல்லூரி மாணவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.