
வேலூர்/சென்னை: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார வாகனம் வந்து நின்றதும் அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சைரன் ஒலித்தபடி கடந்து சென்றது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் பார்த்து கூச்சலிட்டனர்.