
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சித்தூர்க், நான்டெட், வாஷிம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மும்பையின் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.