
புதுடெல்லி: வரும் 2040-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு பூமி திரும்பிய இந்தியாவின் ஷுபான்ஷு சுக்லா குறித்து விவாதித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் விண்வெளித் துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பேச்சில் குறிப்பிட்டார். 2020 முதல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்பு அளித்து வருகிறது. அதன் மூலம் தேசத்தின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் 45 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று அவர் தெரிவித்தார்.