
`அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம்…’
பாட்டாளி மக்கள் கட்சியில், மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், ஒன்பது மாதங்களைக் கடந்து உச்சம் தொட்டுள்ள நிலையில், ராமதாஸ் அணி – அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.
இந்த நிலையில், கடந்த 9-8-2025 அன்று அன்புமணி அணி மாமல்லபுரத்தில் நடத்திய பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில், அவருக்குத் தலைவர் பதவியை ஓராண்டு நீட்டித்திருப்பதாக அறிவித்தது. அதே வேகத்தில், `ஆகஸ்ட் 17-ம் தேதி புதுச்சேரியில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்’ என்று அறிவித்திருந்தார் மருத்துவர் ராமதாஸ்.
இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு தைலாபுரம் தோட்டத்தில் தாய் சரஸ்வதி அம்மாளின் பிறந்தநாளில், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி, சௌமியா அன்புமணி ஆகியோர் கேக் ஊட்டிக் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியானது.
அத்துடன் `அய்யாவிடம் ஆசி பெற்ற சின்ன அய்யா’ என்ற வாசகங்களை, `கண்கள் பனித்தன… இதயம் இனித்தது’ என்ற பாணியில் சமூக வலைதளங்களில் உலவவிட்டது அன்புமணி தரப்பு. உடனே சுதாரித்துக்கொண்ட ராமதாஸ், `அன்புமணி என்னிடம் ஆசியெல்லாம் பெறவில்லை.
`வணக்கம் என்றார் அவ்வளவுதான்’ என்று கூறி உருட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படியான சூழலில் கூடும் பொதுக்குழுவில், `அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம்’ என்று தகவல் பரவியதால், கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பொதுக்குழு நடைபெற்ற புதுச்சேரியை ஒட்டியிருக்கும் பட்டானூர் சங்கமித்ரா மாநாட்டு மையத்தில், 16-ம் தேதி இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் குவிய ஆரம்பித்தனர்.
கூட்டத்துடன் கூட்டமாக ஒதுங்கி நின்ற முகுந்தன் பரசுராமன்
17-ம் தேதி காலையில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குவிந்ததால், திணறியது பட்டானூர் கிராமம். பொதுக்குழு கூட்ட அரங்கத்திற்கு வெளியில் மாவட்ட வாரியாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நிர்வாகியிடமும் புகைப்படம் ஒட்டப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கௌவரத் தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ அருள், மருத்துவர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னரே வந்துவிட்ட நிலையில், சரியாக 11.25 மணிக்கு மேடைக்கு வந்தார் மருத்துவர் ராமதாஸ்.
அதற்குப் பிறகு அவரது மகள் ஸ்ரீகாந்தி மேடைக்கு அழைக்கப்பட்டு, அவருக்கு அருகில் அமர வைக்கப்பட்டார். கடந்த 2024 டிசம்பர் மாதம் இதே மாநாட்டு மையத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்புக் கூட்டத்தில், அன்புமணி அமர வைக்கப்பட்டிருந்த இடம் அது.

ஶ்ரீகாந்தி இருக்கையில் அமர்ந்ததும் மேடையின் வலதுபுறத்தில் கூட்டத்துடன் கூட்டமாக நின்று கொண்டிருந்த மகன் முகுந்தன் பரசுராமனை, அமருமாறு அழைத்தார் ஸ்ரீகாந்தி.
ஆனால், `வேண்டாம்’ என்று மறுத்த முகுந்தன், அம்மாவின் அருகில் வந்து தோளை தட்டிக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
`இந்தப் பொதுக் குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன’ என்று கூறிய ஜி.கே.மணி, `பா.ம.க-வின் நிறுவனராகவும், தலைவராகவும் இனி மருத்துவர் ராமதாஸ் அவர்களே தொடர்வார்’ என்ற முதல் தீர்மானத்தை வாசித்தார். அப்போது நிர்வாகிகள் எழுப்பிய கைதட்டல்கள் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தன.
`அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குங்க’
இதில் உணர்ச்சிவசப்பட்ட ராமதாஸ், தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து நின்றுவிட, கைத்தட்டல்கள் இன்னும் அதிகமானது. கட்சிக் கூட்டத்தில் இப்படி எழுந்து நிற்கும் வழக்கம் ராமதாஸுக்குக் கிடையாது. ஆனால், இந்தச் சூழலில் நிர்வாகிகள் கொடுத்த ஆறுதலில் நெகிழ்ந்து போனார் என்றே சொல்ல வேண்டும்.
இதையடுத்து, `2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், பா.ம.க அதிக இடங்களில் மிகப் பெரிய வெற்றிபெற, உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றிக் கூட்டணியை உருவாக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்படுகிறது’ என்று சொல்ல, கீழே அமர்ந்திருந்த நிர்வாகிகள் ‘அ.தி.மு.க… அ.தி.மு.க…’ என்று குரலெழுப்பினர்.
அதன்பிறகு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியும் மேடைக்கு வந்து ஒவ்வொரு தீர்மானத்தையும் படித்தனர். அவர்களையடுத்துப் பேசிய வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.த.அருள்மொழி, “கட்சி நிர்வாகிகள் எங்களுடன் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், கட்சியை ஆரம்பிக்கும்போது இருந்த நான், தீரன் உள்ளிட்ட அனைவரும் இங்குதான் இருக்கிறோம். இவர்தான் அய்யா… அவரெல்லாம் பொய்யா…” என்று கூறியதை வெகுவாக ரசித்து சிரித்தார் ராமதாஸ்.
அதன்பிறகு ராமதாஸால் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீது கொடுத்த 16 புகார்களை வாசிக்கத் தொடங்கினார் ஜி.கே.மணி. அப்போது, `அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குங்க அய்யா…’ என்று முன் வரிசையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் குரலெழுப்ப, அவர்களை அதட்டி அடக்கினார் ஜி.கே.மணி.
இறுதியாகப் பேசிய மருத்துவர் ராமதாஸ், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நானறிவேன். நீங்கள் விரும்பும் கூட்டணியை ஏற்படுத்துவேன்” என்று கூறியபோது, மீண்டும் ‘அ.தி.மு.க… அ.தி.மு.க…’ என்ற குரல்கள் எழுந்தன.