
சென்னையில் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாகப் போராடிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு நீதிமன்ற உத்தரவு பெயரில் வலுக்கட்டாயமாக கைதுசெய்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
இத்தகைய செயலுக்கு தி.மு.க அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் வந்தது.
மறுபக்கம், கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதியளித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் 13 நாள்கள் போராட்டத்தின்போதும் மௌனம் காத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்ட அடுத்தநாள் அமைச்சரவையைக் கூட்டினார்.
அந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாக இல்லாமல், சட்டமன்றத் தேர்தலுக்கு 9 மாதங்கள் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை இடம்பெறவில்லை.

இவ்வாறிருக்க, வாக்குறுதி கொடுத்திருந்தாலும் கொடுக்காவிட்டாலும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறிவந்த விசிக தலைவர் திருமாவளவன், “பணி நிரந்தரம் செய்யுங்கள் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்கிற கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.
பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்பதுதான் சமூக நீதி” என்று தற்போது கூறியிருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில், திருமாவளவனின் இத்தகைய கருத்து குறித்தும், தூய்மைப் பணியாளர்களுக்கான பணி நிரந்தரம் குறித்தும் தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம், “240 நாள்கள் வேலை செய்தால் அவர்கள் எல்லாம் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்கிறது தமிழ்நாடு அரசின் சட்டம்.
அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்லாது, மற்ற துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் பல ஆண்டுகளுக்கு தற்காலிக பணியாளர்களாக வைத்திருக்கும் போக்கு இருக்கிறது.

அதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் எழுப்பியிருக்கின்ற சட்டப்பூர்வமான கோரிக்கை இந்தப் பணி நிரந்தரம். தோழர் திருமாவளவன் கூறும் கருத்து சரியானது அல்ல.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைப் பற்றி சொல்கிறேன். ஒரு பெண்ணின் அப்பா அம்மா இருவரும் நிரந்தர துப்புரவு பணியாளர்களாக இருந்தார்கள்.
அவர்கள் இருவரும் அதில் வந்த வருமானத்தை வைத்து அந்த பெண்ணை முனைவர் பட்டம் வரைக்கும் படிக்க வைத்ததால், இன்று அப்பெண் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார்.
ஒருவேளை அப்பெண்ணின் பெற்றோருக்கு பணி நிரந்தரமும், அதன் மூலம் வரக்கூடிய வருமானமும் இல்லாமல் போயிருந்தால் அப்பெண்ணும் ஒரு தூய்மைப் பணியாளராகத் தான் இருந்திருப்பார்.
எனவே, பணி நிரந்தரம், அதில் கிடைக்கக்கூடிய ஊதியம், பணிப் பாதுகாப்பு அதைத் தொடர்ந்து வரக்கூடிய பல்வேறு சலுகைகள் என இவையனைத்தும் சேர்ந்து, அடுத்து தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து, உயர்கல்வி பெறுவதற்கும், வேறு பணிகளுக்கும் செல்ல நல்ல வாய்ப்பை அக்குடும்பங்களுக்கு ஏற்படுத்துகிறது.

எனவே, திருமாவளவன் உட்பட அதியமான் ஆகியோர் கூறியிருக்கும் இந்த கருத்து ஏற்புடையதல்ல. பரம்பரையாக அவர்கள் இதே பணியில் நீடிக்க வேண்டும் என்கிற முறையில் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.
இப்போது பணி செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், அதன் மூலமாக சட்டப்பூர்வமான பாதுகாப்பை அந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் நியாயமானது” என்று கூறினார்.