
ஒரு காலத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் விஜயகாந்த் நடத்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றது. பெரும் விழாவை தனியொரு மனிதனாக தலைமையேற்று நடத்திக் காட்டியவர் தயாரிப்பாளர் காஜா மொய்தீன். இவரது ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் சேரனின் `பொற்காலம்’, விஜயகாந்தின் `பேரரசு’, அஜித்தின் `ஜனா’ போன்ற படங்களை தயாரித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பிரபு சாலமன் இயக்கத்தில் `மேம்போ’ படத்தை தயாரித்து வருகிறார்.
ரியல் சிங்கம் + குட்டி சிங்கம்
முன்னணி ஹீரோக்கள் கால்ஷீட்டுக்காக காத்திருக்காமல் ஏற்கெனவே யானையை நம்பி `கும்கி’ படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார். இப்போது சிங்கத்தை நம்பி `மேம்போ’ படத்தை இயக்கி வருகிறார்.
விஜயகுமாரின் பேரனும், வனிதா, ஆகாஷ்க்கு பிறந்த ஶ்ரீ ஹரி ஹீரோவாக நடித்து வருகிறார். வழக்கமாக கோடம்பாக்கத்தில் புதுமுகமாக நடிக்க மும்பையில் போய் நட்சத்திரங்களை செலக்ட் செய்வார்கள். மேம்போ படத்தில் நடிப்பதற்காக இலங்கை , துபாய், பாங்காங் நாடுகளுக்கு சென்று சிங்கம் பிளஸ் குட்டி சிங்கம் இரண்டுக்கும் வேட்டை நடத்தி இருக்கின்றனர்.
முரண்டு பிடித்த சிங்கக் குட்டி
எம்.ஜி.ஆர் படத்தில் வருவது போன்ற காட்சிகளை படமாக்கி உள்ளாராம் இயக்குநர். இப்போது சினிமாவில் AI தொழில்நுட்பம் பயன்படுத்துவது சகஜமாகி விட்டது. எம்.ஜி.ஆர் நடிக்கும் காட்சிகளை AI மூலம் எடுக்காமல் நிஜத்தில் எம் .ஜி.ஆர் போலவே அச்சு அசலாகவே இருக்கிற ஒரு நபரை தேடிப்பிடித்து நடிக்க வைத்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கத்தின் குட்டியை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அன்பளிப்பாக கொடுப்பதுபோல் அமைந்துள்ள காட்சியை படமாக்கி உள்ளனர்.
ஹீரோ ஶ்ரீ ஹரி சிறு வயது கேரக்டரிலும் நடிப்பதால் சிறுவன் ஒருவனை செலக்ட் செய்து பாங்காங்கில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுடன் 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கின்றனர். சினிமா கேமரா, சிறுவனை கண்டதும் முதலில் முரண்டு பிடித்த சிங்கக் குட்டி பிறகு நாய்க் குட்டியாக மாறி செல்லம் காட்டி நடித்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். குட்டி சிங்கத்துக்கு ஒரு நாள் பராமரிப்பு செலவு ஒரு லட்சம் ஆனதாம், பத்து நாட்கள் நடித்ததற்காக சிங்கக் குட்டி வாங்கிய சம்பளம் 2 கோடி என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.
பெரிய சிங்கம் நடிப்பு பிரமாதமாக வந்து இருக்கிறதாம். ஏகப்பட்ட நாடுகளில் நடத்திய தேடுதல் வேட்டையில் கடைசியாக தேர்ந்து எடுக்கப்பட்டது துபாய் சிங்கம். அந்த சிங்கத்தை சென்னைக்கு கொண்டு வந்து ஷூட்டிங் நடதத் திட்டமிட்டனர். இரு நாடுகளின் அரசு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் துபாய் சென்று பெரிய சிங்கத்துடன் ஷூட்டிங் நடத்தி இருக்கிறார் பிரபு சாலமன்.

ஶ்ரீ ஹரியுடன் சேர்ந்து நடிக்கும் போது பயங்கரமாய் கர்ஜித்தபடி நகங்களால் பிராண்டிய சிங்கம், அதன் பின்னர் சில நாள்கள் பழகிய பிறகுதான் நடிக்க முடித்தது என்று சொல்கிறார்கள். பெரிய சிங்கத்துடன் துபாயில் 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினர். சிங்கத்தின் தினசரி செலவு மட்டும் 2 லட்சம் என்கிறார்கள். முப்பது நாளுக்கு மொத்த சம்பளம் 5 கோடி கேட்டு கறாராக கறந்து விட்டார்களாம்.
அதுசரி அது என்ன படத்தின் டைட்டில் மேம்போ என கேட்கிறீர்களா? சிங்கத்தை பரமாரிப்பவர் மேம்போ என்று அழைத்தால்தான் சிங்கம் சொல் பேச்சு கேட்கிறதாம். அதனால் அந்தப் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து விட்டனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…